புதுடெல்லி,
புன்னிய நதியான கங்கை மிகவும் மோசமான அளவு மாசடைந்துள்ள விவகாரத்தில் கவலையை வெளிப்படுத்தியுள்ள டெல்லி பசுமைத் தீர்ப்பாயம், ஹரித்துவாரில் இருந்து உத்தரபிரதேச மாநிலம் உன்னோவ் வரையில் கங்கை நீர் குடிப்பதற்கோ, குளிப்பதற்கோ உகந்தது கிடையாது என கூறியுள்ளது.
உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பது தெரியாமல் அப்பாவி மக்கள் அதனை குடிக்கிறார்கள், குளிக்கிறார்கள் எனவும் கவலையை வெளிப்படுத்தியுள்ளது. கங்கைக்கு மரியாதை செலுத்தி வணங்கும் அப்பாவி மக்கள் அதன் நீரை குடிக்கிறார்கள், குளிக்கிறார்கள். அவர்களுடைய உடலுக்கு பெரும் தீங்கு ஏற்படும் என்று அவர்களுக்கு தெரியவில்லை. உடல் நலத்திற்கு பாதிப்பு ஏற்படும் என்று சிகரெட் பாக்கெட்டில் எச்சரிக்கை வாசகம் இருக்கும் போது, கங்கை மாசடைந்துள்ள நிலையில் இதுபோன்ற எச்சரிக்கையை ஏன் மக்களிடம் எடுத்துச் செல்லக்கூடாது? என கேள்வியை எழுப்பியுள்ளது.
கங்கையில் 100 கிலோ மீட்டர் இடைவேளியில் தண்ணீர் குடிப்பதற்கு மற்றும் குளிப்பதற்கு உகந்ததா என்பது தொடர்பாக விளம்பர பலகையை வைக்க வேண்டும் என்று என்எம்சிஜிக்கு (தேசிய கங்கை நதி தூய்மை இயக்கம்) உத்தரவிட்டுள்ளது. மேலும், கங்கையில் எங்கெல்லாம் குளிக்க மற்றும் குடிக்க தண்ணீர் உகந்த அளவில் உள்ளது என்பது தொடர்பான மேப்பை என்எம்சிஜி மற்றும் மத்திய மாசுகட்டுப்பாட்டு வாரியம் தங்களுடைய இணையதளத்தில் இரண்டு வாரங்களில் வெளியிட வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.