தேசிய செய்திகள்

அலுவல் கூட்டங்களின் போது பிஸ்கட்டுகள் கொடுக்க கூடாது: சுகாதாரத்துறை அமைச்சகம்

ஆலோசனை கூட்டங்களின் போது பிஸ்கட்டுகள், நொறுக்குத்தீனிகள் கொடுக்க கூடாது என்று சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

ஆரோக்கியமான உணவு முறையை ஊக்குவிக்கும் நடவடிக்கையாக, ஆலோசனை கூட்டங்களின் போது பிஸ்கட்கள், நொறுக்குத்தீனிகளுக்கு பதிலாக பேரிச்சம்பழம், வறுத்த கடலை, பாதாம், அக்ரூட் போன்ற உலர் பழங்களை மட்டுமே வழங்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை குடும்ப நலன் துறை அமைச்சகம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.

ஜூன் 19 ஆம் தேதி இந்த சுற்றறிக்கை வெளியானது. உடல் நலனுக்கு ஆரோக்கியமற்ற உணவுகளையோ, பிஸ்கட் அல்லது நொறுக்குத்தீனிகள் போன்றவற்றையோ கண்டிப்பாக வழங்கக் கூடாது என்றும் இந்த நடைமுறை உடனடியாக அமலுக்கு வருகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய நடைமுறை குறித்து ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்த சுகாதாரத்துறை அமைச்சக அதிகாரிகள், இந்த புதிய நடவடிக்கை எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அமைச்சர் ஒரு மருத்துவர் என்பதால், துரித உணவுகளால் ஏற்படும் பாதிப்புகளை அவர் நன்கு அறிவார். எனவே இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார். இந்த முடிவை நாங்கள் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்வோம் என்றார்.

சுகாதாரத்துறை அமைச்சகத்தின் ஒவ்வொரு துறை ஆலோசனை கூட்டம் அல்லது அதிகாரிகளின் அலுவல் கூட்டத்தின் போதும் கண்டிப்பாக பிஸ்கட்கள் அல்லது ஆரோக்கியமற்ற உணவுகளை வழங்கக் கூடாது என்று சுற்றறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.