பெங்களூரு,
பெங்களூரு கெங்கேரி துணை நகரத்தில் உள்ள அம்பேத்கர் பவனில் கொரோனா கண்காணிப்பு மையத்தை மாநகராட்சி நிர்வாகம் அமைத்துள்ளது. அதன் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி எடியூரப்பா கலந்து கொண்டு, அந்த கண்காணிப்பு மையத்தை தொடங்கி வைத்தார். அதன் பிறகு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கெங்கேரியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தை தொடங்கி வைத்துள்ளேன். இங்கு லேசான நோய் அறிகுறி உள்ளவர்களை வைத்து கண்காணிக்கப்படும். இதில் யாருக்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படுகிறது என்பதை இங்கு பணியாற்றும் டாக்டர்கள் முடிவு செய்வார்கள். அத்தகையவர்கள் ஆம்புலன்சில் அழைத்து சென்று மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார்கள்.
இங்கு 24 மணி நேரமும் டாக்டர்கள் இருப்பார்கள். 3 ஷிப்டுகளில் டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் பணியாற்றுவார்கள். வீட்டு தனிமையில் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு மருந்து தொகுப்பு மற்றும் மருத்துவ ஆலோசனை வழங்கப்படுகிறது.
கொரோனா தொற்றுக்கு ஆளாபவர்கள் இந்த கொரோனா கண்காணிப்பு மையத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இங்கு அனைத்து மருத்துவ வசதிகளும் உள்ளன. கர்நாடகத்தில் அமலில் உள்ள ஊரடங்கை நீட்டிப்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. அதுகுறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். அதன் பிறகு உங்களுக்கு தெரிவிக்கிறேன்.
இவ்வாறு எடியூரப்பா கூறினார்.