பெங்களூரு,
ஈஷா பவுண்டேசன் சார்பில் உலக வன தின விழா, காவிரி கூக்குரல் நிகழ்ச்சி பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் மத்திய சுற்றுச்சூழல், வனம், காலநிலை மாற்றம், செய்தி தகவல் தொடர்புத்துறை, பெரிய தொழில் நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் பேசுகையில் கூறியதாவது:-
மழையால் கிடைக்கும் ஒவ்வொரு சொட்டு நீரையும் சேமிக்க வேண்டியதை நாம் உறுதி செய்ய வேண்டும். தண்ணீரை மீண்டும் மறுசுழற்சி செய்து பயன்படுத்த வேண்டும். தண்ணீரை தவறாக பயன்படுத்த யாருக்கும் உரிமை இல்லை.
நதிகளை பாதுகாப்பது நமது கடமை. மத்திய அரசின் திட்டங்களால் மனிதர்கள்-மிருகங்கள் இடையேயான மோதல் குறைந்துள்ளது. காடுகளில் வன விலங்குகளுக்கு உணவு கிடைக்கும் நிலை உருவாகியுள்ளது.
சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் மக்கள் முன்னெடுக்கும் அனைத்து முயற்சிகளையும் மத்திய அரசு ஆதரிக்கும். வனத்தை பாதுகாக்க அனைவரும் இணைந்து முயற்சி செய்ய வேண்டும்.
இவ்வாறு பிரகாஷ் ஜவடேகர் கூறினார்.