தேசிய செய்திகள்

மூடநம்பிக்கைகள் கிடையாது; சிவராத்திரியிலும் அசைவம் சாப்பிடுவேன் - பட்ஜெட் தாக்கல் செய்த நேரம் குறித்து சித்தராமையா விளக்கம்

தன்னைப் பொறுத்தவரை எல்லா நாட்களும் ஒன்றுதான் என சித்தராமையா தெரிவித்துள்ளார்.

பெங்களூரு,

கர்நாடக முதல் -மந்திரி சித்தராமையா, சமீபத்தில் மாநில பட்ஜெட்டை கர்நாடக சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார். இதனிடையே, சித்தராமையா நல்ல நேரம் பார்த்து பட்ஜெட் தாக்கல் செய்ததாக எதிர்க்கட்சி தலைவர் ஆர்.அசோக் கூறியிருந்தார்.

இது குறித்து ஆர்.அசோக் கூறுகையில், “கடந்த காலங்களில் சித்தராமையா நல்ல நேரத்தை பார்க்காமல் இருந்திருக்கலாம். ஆனால் இந்த முறை அவர் நல்ல நேரம் பார்த்து பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். ஏனெனில் அடுத்த முறை பட்ஜெட் தாக்கல் செய்வோமா? என்ற கவலை அவருக்கு எழுந்துள்ளது” என்று விமர்சித்திருந்தார்.

இந்நிலையில், இந்த விமர்சனத்திற்கு பதிலளிக்கும் வகையில் சட்டமன்றத்தில் இன்று பேசிய சித்தராமையா, “அரசாங்கத்தின் செயல்பாடுகள் மூடநம்பிக்கைகளை சார்ந்து இருக்கக் கூடாது. ராகு காலம், குளிகை காலம், எமகண்டம் உள்ளிட்ட நேரங்கள் குறித்த நம்பிக்கைகளை நான் தொடர்ந்து மறுத்து வந்திருக்கிறேன்.

நான் கடந்த காலங்களில் பலமுறை ராகு காலத்தில் பட்ஜெட் தாக்கல் செய்திருக்கிறேன். இந்த முறை அதனை தவிர்க்குமாறு எனது குடும்பத்தினர் மற்றும் அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர். ஜனநாயகத்தின் மீது எனக்கு நம்பிக்கை இருப்பதால், அவர்களின் வேண்டுகோளை மதித்து நடந்து கொண்டேன்.

ஆனால் தனிப்பட்ட முறையில் நல்ல நேரம், கெட்ட நேரம் குறித்தோ, கிரகணத்தை பற்றிய மூடநம்பிக்கைகள் குறித்தோ எனக்கு எந்த கவலையும் இருந்ததில்லை. உகாதி, சிவராத்தி போன்ற பண்டிகை தினங்களில் அசைவம் சாப்பிடுவதை பலர் தவிர்க்கின்றனர். ஆனால் அந்த பண்டிகை நாட்களிலும் நான் அசைவம் சாப்பிடுவேன்.

நாம் சில நாட்களை பண்டிகைகள் என்று குறிப்பிட்டு வைத்திருக்கிறோம். என்னைப் பொறுத்தவரை எல்லா நாட்களும் ஒன்றுதான்” என்று தெரிவித்தார்.