புதுடெல்லி,
இந்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகத்தின் சார்பில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் இந்தியாவில் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளுக்கு இடையில் தூய்மைக்கான போட்டி நடத்தப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி இந்த ஆண்டிற்கான விருதுகளை வழங்கும் விழா டெல்லியில் நேற்று நடைபெற்றது.
இந்த விழாவில் பங்கேற்ற ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், தூய்மையான நகரங்கள் குறித்த போட்டி முடிவுகளை வெளியிட்டு வெற்றியாளர்களை பாராட்டினார்.
மூன்று லட்சத்துக்கும் அதிகமான பத்து லட்சத்துக்கும் குறைவான மக்கள்தொகை கொண்ட நகரம் பிரிவில் அதில் குப்பைகள் இல்லாத நகரமாக நொய்டா தேர்வாகி உள்ளது. அத்துடன் நாட்டில் தூய்மையான நகரமாகவும் தேர்வானது.
மத்தியபிரதேச மாநிலத்தின் இந்தூர் நகரம் தொடர்ந்து 5வது முறையாக இந்தியாவின் தூய்மையான நகரம் எனும் விருதை பெற்றது. இரண்டாவது இடத்தில் குஜராத்தின் சூரத் உள்ளது. ஆந்திர மாநிலத்தின் விசாகப்பட்டினம் நகரம் 3வது இடம் பிடித்தது.
சட்டீஸ்கர் மாநிலம் நாட்டிலேயே மிகவும் தூய்மையான மாநிலம் எனும் விருதை பெற்றது.
பிரதமர் மோடியின் வாரணாசி தொகுதி தூய்மையான கங்கா நகரம் எனும் விருதை பெற்றது.