புதுடெல்லி,
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு வரும் அக்டோபர் 4ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த சூழலில் கொரோனா பாதிப்பு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் பெய்து வரும் கன மழை காரணமாக தேர்வை மூன்று மாதங்களுக்கு ஒத்தி வைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை தேர்வர்கள் 20 பேர் தாக்கல் செய்து இருந்தனர்.
இந்த வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர் மற்றும் சஞ்சீவ் கண்ணா அமர்வு விசாரித்து வருகிறது. முந்தைய விசாரணையில், இந்த தேர்வை ஒத்திவைப்பது தொடர்பாக மத்திய அரசும், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையமும் பதில் அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டு இருந்தனர்.
இந்த நிலையில் நேற்று நடந்த விசாரணையில் தேர்வை ஒத்தி வைக்க முடியாது என்று யுபிஎஸ்சி பதில் அளித்தது. மேலும் தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் ஏற்கனவே செய்யப்பட்டுள்ளதாக விளக்கமும் அளித்தது.
இதனைத்தொடர்ந்து நீட். ஜே.இ.இ தேர்வுகளுக்கு அனுமதி அளித்ததை போல சிவில் சர்வீஸ் தேர்வுக்கும் அனுமதி அளிக்க வேண்டும் என்று யுபிஎஸ்சி பிரமாணபத்திரம் தாக்கல் செய்துள்ளது. சிவில் சர்வீஸ் தேர்வை தள்ளி வைத்தால் காலம் தோறும் பின்பற்றி வரும் சுழற்ச்சிமுறை பாதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.