புதுடெல்லி,
உலக நாடுகளில் தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கொரோனாவுக்கு, செல்வ வளம் நிறைந்த நாடுகளை அடுத்து வளர்ந்து வரும் நாடுகளிலும் கடுமையாக மக்கள் பாதிப்படைந்து உள்ளனர். உலகம் முழுவதும் 2 கோடி பேருக்கு மேல் கொரேனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளதுடன், 7.5 லட்சம் பேர் பலியாகி உள்ளனர்.
இவற்றில் வல்லரசாக கூறப்படும் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. இதனை தொடர்ந்து பிரேசில் நாடு உள்ளது. அமெரிக்காவில் 50 லட்சம் பேர் வைரசின் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
இதேபோன்று பலி எண்ணிக்கையிலும் அந்நாடு முதல் இடத்தில் உள்ளது. இதனை தொடர்ந்து, மெக்சிகோ மற்றும் பிரேசில் ஆகிய நாடுகள் உள்ளன. 4வது இடத்தில் இங்கிலாந்து நாடு இருந்து வந்தது.
உலக அளவில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளின் வரிசையில் சீனாவுக்கு அடுத்த இடத்தில் உள்ள இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 942 பேர் பலியாகி உள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 47 ஆயிரத்து 33 ஆக உயர்ந்து உள்ளது.
இதனை அடுத்து, பலி எண்ணிக்கையில் இங்கிலாந்து நாட்டை பின்னுக்கு தள்ளி இந்தியா 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கையும் ஒரே நாளில் 66 ஆயிரத்திற்கு மேல் உறுதி செய்யப்பட்டு உள்ளது. இது அமெரிக்கா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளை விட எண்ணிக்கையில் அதிகம் ஆகும்.
இதேபோன்று மொத்த பாதிப்பு ஏறக்குறைய 24 லட்சம் என்ற எண்ணிக்கையை இந்தியா தொட்டுள்ள நிலையில், உலக அளவில் அதிக பாதிப்புகளை கொண்ட 3வது நாடாகவும் உள்ளது.