புதுடெல்லி,
டெல்லியில் கடுமையான காற்று மாசு நிலவுகிறது. காற்று மாசு காரணமாக டெல்லியில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க வந்த இலங்கை வீரர்கள் கடும் அவதிப்பட்டனர். அந்த அளவுக்கு காற்று மாசு டெல்லியில் நிலவுகிறது. காற்று மாசுவை குறைக்கும் செயல்திட்டத்தை தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் டெல்லி அரசு இன்று சமர்பித்தது. அந்த அறிக்கையில், பெண்கள், என யாருக்கும் விலக்கு அளிக்கப்படாமல் வாகன கட்டுப்பாடு திட்டம் மீண்டும் டெல்லியில் அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த மாதம் டெல்லியில் காற்று மாசு மிகவும் அபாய கட்டத்தை எட்டியிருந்த போது, ஒற்றைப்படை தேதிகளில் ஒற்றைப்படைஎண்கள் கொண்ட வாகனங்கள் இயக்கவும், இரட்டைப்படை தேதிகளில் இரட்டைப்படை எண்களில் முடியும் வாகனங்களை இயக்கவும் அனுமதி அளிக்கும் வாகன கட்டுப்பாடு திட்டத்தை அமல்படுத்தியது. ஆனால், இந்த திட்டத்தில் இரு சக்கர வாகனங்களுக்கும் பெண்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டு இருந்தது. ஆனால், இதற்கு டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிருப்தி தெரிவித்தது. இதையடுத்து, வாகன கட்டுப்பாடு திட்டத்தை டெல்லி அரசு அமல்படுத்தவில்லை.
இந்த நிலையில், டெல்லி அரசு தற்போது தீர்ப்பாயத்தின் முடிவுக்கு ஏற்ப வாகன கட்டுப்பாடு திட்டத்தை அமல்படுத்த தயராக இருப்பதாக தெரிவித்துள்ளது. காற்றில் மாசு அளவு மிகவும் அபாய நிலையை எட்டினால், அனைத்து கட்டுமானப்பணிகளையும் நிறுத்துவதாகவும் உறுதி அளித்துள்ளது. ஆனால், டெல்லி அரசை கடுமையாக சாடியுள்ள தேசிய பசுமை தீர்ப்பாயம், மாசு தொடர்பாக இதுவரை ஒரு வழக்கு கூட பதியவில்லை. அரசு வெறுமனே பேச மட்டுமே செய்வதாகவும் கள அளவில் இது பிரதிபலிப்பதில்லை. டெல்லி அரசு அளிக்கும் வாக்குறுதிகளை பின்பற்றுவதில்லை என தெரிவித்துள்ளது.
முன்னதாக, கடந்த திங்கள் கிழமை தேசிய பசுமை தீர்ப்பாயம், காற்று மாசுவை கட்டுப்படுத்துவது தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்யாத
டெல்லி அரசுக்கு கண்டனம் தெரிவித்து இருந்தது. மேலும், இந்தியா- இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடத்தியதற்கும் தேசிய பசுமை தீர்ப்பாயம் கண்டனம் தெரிவித்து இருந்தது.