புவனேஷ்வர்,
ஒடிசா மாநிலத்தில் 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது தள்ளி வைக்கப்பட்டுள்ளது.ஒடிசாவில் அரையாண்டு விடுமுறை முடிந்து, ஜனவரி 3ந்தேதி(நாளை) பள்ளிகள் திறக்கப்பட இருந்த நிலையில், ஒமைக்ரான் மற்றும் கொரோனா பாதிப்பு எதிரொலியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அம்மாநில பள்ளிக்கல்வி துறை மந்திரி சமீர் ரஞ்சன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது,
ஒடிசா மாநிலத்தில் 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறைகளுக்கு பின் மீண்டும் நாளை முதல் பள்ளிகள் திறக்கப்படவிருந்த நிலையில், கடந்த இரு தினங்களாக ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை அதிகமாகி வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகள் திறப்பது தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
அதே சமயம், 6 முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வழக்கம்போல பள்ளிகள் தொடர்ந்து செயல்படும். மேலும், பத்தாம் வகுப்பு தேர்வுகளும் ஏற்கனவே வெளியிட்ட கால அட்டவணைப்படி நடைபெறும் என்று கூறினார்.
தமிழகத்தில் கொரோனா தொற்று நிலவரம் குறித்து ஆய்வு செய்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜனவரி 10 ஆம் தேதி வரை பள்ளிகள் செயல்பட தடை விதித்து உத்தரவிட்டிருந்த நிலையில் ஒடிசாவிலும் பள்ளிகள் திறப்பது தள்ளி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.