புதுடெல்லி,
கொரோனா வைரஸ் பல்வேறு வகைகளில் உருமாறி டெல்டா, டெல்டா பிளஸ் என வகைகளில் பரவி வந்தது. தற்போது கொரோனா மேலும் உருமாறி ஒமைக்ரான் என்ற பெயரில் உலகை அச்சுறுத்தி வருகிறது. தென் ஆப்பிரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்த ஒமைக்ரான் கண்டறியப்பட்டது. தற்போது, இந்தியாவிலும் இந்த ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவத்தொடங்கி உள்ளது.
ஒருபக்கம் கொரோனாவின் 3-வது அலை சுழன்று அடிக்கும் நிலையில், மறுபக்கம் ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், இந்தியாவில் தற்போது 28 மாநிலங்களில் ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் தற்போதைய நிலவரப்படி ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5,488 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி நாட்டில் அதிகபட்சமாக
மராட்டியத்தில் 1,347 பேருக்கும்,
ராஜஸ்தானில் 792 பேருக்கும்,
டெல்லியில் 549 பேருக்கும்,
கேரளாவில் 486 பேருக்கும்,
கர்நாடகத்தில் 479 பேருக்கும்,
மேற்கு வங்காளத்தில் 294 பேருக்கும்,
உத்தரபிரதேசத்தில் 275 பேருக்கும்,
தெலுங்கானாவில் 260 பேருக்கும்,
குஜராத்தில் 236 பேருக்கும்,
தமிழ்நாட்டில் 185 பேருக்கும்,
ஒடிசாவில் 169 பேருக்கும்,
அரியானாவில் 162 பேருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் மராட்டிய மாநிலத்தில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட 1,367 பேரில் இதுவரை 734 பேர் குணமடைந்துள்ளனர் என்றும் ராஜஸ்தானில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட 792 பேரில் இதுவரை 510 பேர் குணமடைந்துள்ளனர் என்றும், டெல்லியில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட 549 பேரில் இதுவரை 57 பேர் குணமடைந்துள்ளனர் என்றும், கேரளாவில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட 486 பேரில் இதுவரை 140 பேர் குணமடைந்துள்ளனர் என்றும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.