தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீர்: என்கவுண்டரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச்சண்டையில் பயங்கரவாதி ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டான்.

ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீரின் ஹந்த்வாரா பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதிக்கு விரைந்து சென்ற பாதுகாப்பு படையினர் குறிப்பிட்ட இடத்தை சுற்றிவளைத்தனர். அப்போது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். உடனே சுதாரித்துக்கொண்ட பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் நடத்தினர்.

இரு தரப்புக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச்சண்டையில், பயங்கரவாதி ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டான். மேலும் ஒரு பயங்கரவாதி அப்பகுதியில் மறைந்து இருப்பதாக நம்பப்படுவதால், தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளத்தாக்கு பகுதிகளில் இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது.