புதுடெல்லி,
நாட்டில் கொரோனா தடுப்பூசிகளின் அவசரகால பயன்பாட்டுக்கு மத்திய அரசு அனுமதி அளித்த நிலையில், தடுப்பூசி போடும் பணியை கடந்த ஆண்டு ஜனவரி 16ல் பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார்.
தொடக்கத்தில் மருத்துவ பணியாளர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டது. கடந்த ஆண்டு பிப்ரவரி 2 முதல் முன்கள பணியாளர்களுக்கும் தடுப்பூசிகள் போடப்பட்டன. மார்ச் 1 முதல் 60 வயதுக்கு மேற்பட்டோர், 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கும் தடுப்பூசி போடும் பணி விரிவுபடுத்தப்பட்டது. கடந்த ஆண்டு ஏப்ரல் 1 முதல், 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி என அறிவிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு மே 1 முதல், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணி விரிவுபடுத்தப்பட்டது. தொடக்கத்தில் தடுப்பூசி போட்டு கொள்வதில் மக்களுக்கு தயக்கம் இருந்தது.
எனினும், 'தடுப்பூசி மட்டுமே கொரோனாவை வெல்லும் பேராயுதம்' என மத்திய அரசு தொடர்ந்து பிரசாரம் செய்ததன் பலனாக, மக்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்தது. கடந்த ஆண்டு ஏப்ரல் 1ல் தடுப்பூசி டோஸ் எண்ணிக்கை 10 கோடியை எட்டியது.
இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டு அக்டோபர் 21ல் 100 கோடி டோஸ் என்ற இலக்கை கடந்தது. தடுப்பூசி பணி தொடங்கி ஒன்பது மாதங்களுக்குள் 100 கோடி டோஸ் இலக்கை எட்டியது, உலக அளவில் மிக பெரிய சாதனையாக கருதப்படுகிறது.
இதேபோன்று, கடந்த 7ந்தேதி தடுப்பூசி டோஸ் எண்ணிக்கை 150 கோடியை கடந்தது. இதுவரை 157 கோடிக்கும் அதிகமான டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டு உள்ளன.