புதுடெல்லி,
உக்ரைன் நாட்டில் கடந்த 3 நாட்களாகவே கடுமையான போர் நடைபெற்று வருகிறது. ரஷ்யாவின் இந்த ராணுவ நடவடிக்கை காரணமாக உக்ரைன் நாட்டின் வான்வழி முற்றிலுமாக மூடப்பட்டுள்ளது.
இதனால் அங்கு சிக்கியுள்ள வெளிநாட்டினரை மீட்க உலக நாடுகள் மாற்றுவழி குறித்து ஆலோசித்து வருகிறது. உக்ரைன் நாட்டில் மாணவர்கள் உட்பட சுமார் 16 ஆயிரம் இந்தியர்கள் இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இதனிடையே அங்குச் சிக்கி உள்ள மாணவர்கள் உட்பட இந்தியர்களை வேறு வழிகளில் மீட்கும் நடவடிக்கைகளில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு உள்ளது.
உக்ரைன் நாட்டை சுற்றி உள்ள அண்டை நாடுகளின் உதவியுடன் அங்குள்ள இந்திய மாணவர்கள் மீட்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது. உக்ரைன் நாட்டில் இருந்து சாலை வழியாக ருமேனியா மற்றும் ஹங்கேரி நாடுகளுக்கு வந்து கொண்டு இருக்கின்றனர்.
இதனிடையே இந்தியர்களை வெளியேற்றும் பணிகளைத் தானே நேரடியாகக் கண்காணித்து வருவதாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்திருந்தார். இதனையடுத்து உக்ரைனில் இருந்து ருமேனியா சென்ற 219 இந்தியர்களுடன் அந்நாட்டு தலைநகர் புக்கரெஸ்ட்டில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா நிறுவனத்தின் முதல் விமானம் வெற்றிகரமாக மும்பையில் தரையிறங்கியது. உக்ரைனில் இருந்து அழைத்து வரப்பட்ட இந்தியர்களை விமானத்திலேயே சென்று மத்திய மந்திரி பியூஷ் கோயல் வரவேற்றார். தாயகம் திரும்பிய பயணிகள் மகிழ்ச்சியில் ஜெய் ஹிந்த் முழக்கம் எழுப்பினர்.
இந்நிலையில் உக்ரைனில் இருந்து இந்தியர்கள் மீட்கப்படும் திட்டத்திற்கு ஆபரேஷன் கங்கா என மத்திய அரசு பெயர் வைத்துள்ளது. இதன்படி ஆப்ரேஷன் கங்காவின் முதல் படி வெற்றிகரமாக முடிந்துள்ளதாக வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.