தேசிய செய்திகள்

கடலோர பகுதி பற்றிய ஆய்வு முடிவு வெளியீடு

நமது நாட்டின் கடலோர பகுதி 7 ஆயிரத்து 517 கி.மீ. நீளம் கொண்டது.

புதுடெல்லி,

6 ஆயிரத்து 31 கி.மீ. நீள கடலோர பகுதியை 1990ம் ஆண்டில் இருந்து 2016ம் ஆண்டு வரை கடலோர ஆராய்ச்சிக்கான தேசிய மையம் ஆய்வு செய்தது. அதன் முடிவுகள் இப்போது வெளியிடப்பட்டு உள்ளன.

அதில் மூன்றில் ஒரு பகுதி அரிப்புக்கு உள்ளாகி உள்ளதாக கூறப்பட்டு உள்ளது. அதே நேரத்தில் 29 சதவீத பகுதி புதிதாக இயல்பாகவும், படிமங்கள் மூலமும் சேர்ந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுபற்றி கடலோர ஆராய்ச்சிக்கான தேசிய மையத்தின் இயக்குனர் எம்.வி. ரமண மூர்த்தி கூறுகையில், ஒரு பக்கம் கடலோரத்தில் இருந்து மணல், வண்டல் ஓடிவிட்டால், இன்னொரு பக்கம் எங்கோ ஒரு பக்கத்தில் இருந்து சேர்க்கையும் உள்ளது என்று குறிப்பிட்டார்.

அரிப்பை பொறுத்தவரையில் மேற்கு வங்காள மாநிலத்தின் 63 சதவீத கடலோர பகுதி அரிப்பை சந்தித்து உள்ளது. புதுச்சேரியில் 57 சதவீத கடலோர பகுதியும், ஒடிசாவில் 28 சதவீத கடலோர பகுதியும், ஆந்திராவில் 27 சதவீத கடலோர பகுதியும் அரிப்புக்கு ஆளாகி உள்ளன.

அரிப்பை பொறுத்தவரையில் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு காரணம் சொல்லப்பட்டு உள்ளது. அரபி கடலோரத்தை விட வங்காளவிரிகுடா கடலோரம்தான் அதிக அரிப்பை சந்தித்து உள்ளதாக ஆய்வில் தெரிய வந்து இருக்கிறது.

SCROLL FOR NEXT