புதுடெல்லி,
இந்திய முஸ்லீம்களை பாகிஸ்தானியர்கள் என்று அழைப்பவர்களுக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க கூடிய வகையில் சட்டம் இயற்ற வேண்டும் என்று ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியின் தலைவரும் ஐதராபாத் எம்.பியுமான அசாதுதின் ஓவைசி கோரிக்கை விடுத்துள்ளார். மக்களவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய ஓவைசி இந்த கோரிக்கையை முன்வைத்தார்.
ஓவைசி கூறுகையில், இந்திய முஸ்லீம்களை பாகிஸ்தானியர்கள் என அழைப்பதை தண்டிக்க கூடிய குற்றமாக்க வேண்டும். இந்திய முஸ்லீம்களை பாகிஸ்தானியர்கள் என அழைப்பவர்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்க கூடிய வகையில் சட்டம் இயற்ற வேண்டும். நரேந்திர மோடி தலைமையிலான அரசு, இது போன்ற மசோதாவை பாராளுமன்றத்தில் கொண்டு வரப்போவது இல்லை. முத்தலாக் மசோதா பெண்களுக்கு எதிரானது இவ்வாறு தெரிவித்தார்.