இஸ்லமாபாத்,
1919ம் ஆண்டு ஏப்ரல் 13ந்தேதி பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரில் உள்ள ஜாலியன்வாலாபாக் மைதானத்தில் ஒரு அமைதியான பொதுக்கூட்டம் நடந்தது. இந்தியர்களின் பேச்சுரிமை உள்பட அனைத்து உரிமைகளையும் பறிக்கும் கொடிய ரவுலட் சட்டத்தை எதிர்த்தும், ஏற்கனவே இந்த சட்டத்தை எதிர்த்து போராடியவர்கள் கைது செய்யப்பட்டு, துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதால் பலர் கொல்லப்பட்டது ஆகியவற்றை கண்டித்தும் நடந்த அகிம்சை கூட்டம்தான் அது.
பிரிகேடியர் ஜெனரல் ரொனால்டு டயர் என்ற வெள்ளைக் காரர் தலைமையில் வந்த ஆங்கிலேய ராணுவ படை, கூடியிருந்தவர்களை கலைந்து செல்லும்படி எச்சரிக்கை விடுக்காமல், பீரங்கியால் சுட்டு வீழ்த்தினர். 10 நிமிட நேரம் 1,650 ரவுண்டுகள் சுட்டப்பிறகுதான் பீரங்கிகள் ஓய்ந்தன. சுட்டேன் சுட்டேன் குண்டுகள் தீரும்வரை சுட்டேன் என்று கொக்கரித்தான் பிரிகேடியர் ஜெனரல் டயர். இந்த சம்பவத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உயிர்இழந்தனர். ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்தனர்.
இந்த சம்பவத்தின் நூற்றாண்டு நினைவு தினம் கடந்த 13-ஆம் தேதி அனுசரிக்கப்பட்டது. இந்நிலையில், ஜாலியன்வாலா பாக் சம்பவம் மற்றும் மார்ஷியல் சட்டம் தொடர்பான அரிய ஆவணங்களை, பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண அரசு முதன்முறையாக காட்சிப்படுத்தியுள்ளது.இதுதொடர்பாக பஞ்சாப் மாகாண அரசின் ஆவணங்கள் காப்பகத் துறை இயக்குநர் அப்பாஸ் சுக்டாய் கூறுகையில், வரலாற்று நிகழ்வுகளை மக்கள் அறிந்து கொள்வதற்காக இந்த முடிவை அரசு மேற்கொண்டது. லாகூர் பாரம்பரிய அருங்காட்சியகத்தில், ஜாலியன்வாலா பாக் சம்பவம் தொடர்பான ஆவணங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
வரும் 26-ஆம் தேதி வரை ஆவணங்களை மக்கள் பார்வையிடலாம். ஜாலியன்வாலா பாக் சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்பாக பிரிட்டிஷ் அதிகாரிகளிடையே நடைபெற்ற தகவல் பரிமாற்றங்கள் உள்பட பல்வேறு தகவல்களுடன் கூடிய ஆவணங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றை மக்கள் பார்வையிட்டு, வரலாற்றை அறிந்துகொள்ள வேண்டும் என்றார்.