தேசிய செய்திகள்

கர்நாடக மாநிலத்திற்கு தனி மூவர்ண கொடி; 9 பேர் கொண்ட குழு பரிந்துரை

கர்நாடகாவிற்கு என தனியாக மூவர்ண கொடியை வடிவமைக்க மாநில அரசு அமைத்த 9 பேர் கொண்ட குழு பரிந்துரை செய்துள்ளது.

பெங்களூரு,

கர்நாடகாவில் சித்தராமையா தலைமையிலான அரசு மாநிலத்திற்கு என தனியாக ஒரு கொடியை வடிவமைப்பதற்காக 9 பேர் கொண்ட குழு ஒன்றை உருவாக்கியது. அந்த குழு அதற்கான பரிந்துரை கொண்ட அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்துள்ளது.

கொடியின் வடிவமைப்பு பற்றி பெயர் வெளியிட விருப்பம் இல்லாத குழு உறுப்பினர் ஒருவர் கூறுகையில், மஞ்சள், வெள்ளை மற்றும் சிவப்பு என மூன்று நிறங்களை கொண்டிருக்கும். கொடியின் மத்தியில் வெள்ளை நிறம் இருப்பதுடன் மாநில அரசின் சின்னம் அதில் இடம்பெற்றிருக்கும் என கூறியுள்ளார்.

இந்த பரிந்துரைக்கு அரசியலமைப்பு அல்லது சட்டவிதிகளில் தடைகள் இருக்கும் என்றால் நாங்கள் அறிக்கையை சமர்ப்பித்திருக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

அரசின் பரிந்துரை குழு அமைக்கும் முடிவுக்கு பாரதீய ஜனதா உள்ளிட்ட கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மாநிலத்திற்கு என்று தனி கொடி வைத்திருப்பதற்கு எதிராக அரசியலமைப்பு சட்டம் எதுவும் இல்லை என்று முதல் மந்திரி சித்தராமையா கூறியுள்ளார்.