பாட்னா,
சஞ்சீவ்குமார் சிங் என்பவர் பாட்னா தலைமை ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஒரு வழக்கு தாக்கல் செய்தார்.
அதில், காங்கிரசை சேர்ந்த தான், கடந்த 2019-ம் ஆண்டு மக்களவை பொதுத் தேர்தலில் அக்கட்சி சார்பில் போட்டியிட விரும்பியதாகவும், அதற்காக சீட் பெற்றுத் தருவதாக கூறி ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் ரூ.5 கோடி பெற்று மோசடி செய்து விட்டதாகவும் கூறியிருந்தார்.
தேஜஸ்வி யாதவுடன், அவரது சகோதரியும், எம்.பி.யுமான மிசா பாரதி, பீகார் மாநில காங்கிரஸ் தலைவர் மதன்மோகன் ஜா, மறைந்த முன்னாள் தலைவர் சதானந்த் சிங், அவரது மகன் சுபானந்த் முகேஷ், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ராஜேஷ் ரத்தோர் ஆகியோரது பெயர்களையும் சஞ்சீவ்குமார் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், சஞ்சீவ்குமாரின் புகாரின் அடிப்படையில் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துமாறு பாட்னா எஸ்.பி.க்கு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. கோர்ட்டின் இந்த உத்தரவு குறித்து ராஷ்டிரிய ஜனதா தளம் ஏமாற்றம் தெரிவித்துள்ளது. அதேநேரம் மாநில காங்கிரஸ் கட்சியினர் வாய் திறக்கவில்லை. ராஷ்டிரிய ஜனதா தளத்தின் நீண்டகால கூட்டணி கட்சியான காங்கிரஸ், கடந்த மக்களவை தேர்தலை ஒன்றாக சந்தித்தது.