தேசிய செய்திகள்

2021ம் ஆண்டில் ஊடுருவல்-74%, உயிரிழப்புகள்-89% குறைவு: மத்திய அரசு தகவல்

நாட்டில் 2021ம் ஆண்டில் ஊடுருவல் சம்பவங்கள் 74%மும், மக்கள் உயிரிழப்பு 89%மும் குறைந்து உள்ளன என நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை இணை மந்திரி நித்யானந்த ராய் இன்று கூறியுள்ளார்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 18ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. இந்த தொடரை ஆக்கப்பூர்வமாக நடத்துவதற்கு மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அக்னிபத் திட்டம், ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு, விலைவாசி உயர்வு ஆகியவை குறித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டு, நாடாளுமன்ற அலுவல் பணிகள் பாதிக்கப்பட்டபோதும், தொடர்ந்து அவை நடந்து வருகிறது.

இந்நிலையில், நாடாளுமன்ற மேலவையில் மத்திய உள்துறை இணை மந்திரி நித்யானந்த ராய் இன்று பேசும்போது, 2014ம் ஆண்டில் இருந்து வடகிழக்கு மாநிலங்களில் பாதுகாப்பு சூழ்நிலை கணிசமாக மேம்பட்டு உள்ளது என கூறியுள்ளார்.

2014ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, 2021ம் ஆண்டில் ஊடுருவல் சம்பவங்கள் 74% குறைந்துள்ளன. பொதுமக்களின் உயிரிழப்புகள் 89% குறைந்து உள்ளன. பாதிப்புக்கு ஆளான பாதுகாப்பு படையினரின் எண்ணிக்கை 60% என்ற அளவில் குறைந்தும் உள்ளன என அவர் கூறியுள்ளார்.