புதுடெல்லி,
கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து கொரோனா பாதிப்பு குறைந்து வந்த மாநிலங்களில், படிப்படியாக ஊரடங்கு தளர்வுகளை அந்தந்த மாநில அரசுகள் அறிவித்து வருகின்றன. பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்கள் உள்ளிட்டவை பல்வேறு கட்டுப்பாடுகள் திறக்கப்பட்டு இயங்கி வருகின்றன.
அந்த வகையில் உத்தர பிரதேச மாநிலத்திலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், அங்கு பல்வேறு ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக திறந்து வெளிகளில் திருமணம் உள்ளிட்ட பொது நிகழ்ச்சிகளை நடத்துவது தொடர்பான அறிவிப்பை அந்த மாநில அரசு வெளியிட்டுள்ளது.
அதன்படி, இடத்தின் பரப்பளவை பொறுத்து திறந்த வெளிகளில் திருமணம் உள்ளிட்ட பொது நிகழ்ச்சிகளை நடத்த, அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் அனுமதி அளிக்கலாம் என உத்தர பிரதேச மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. அதே சமயம் உள் அரங்குகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் 100 நபர்கள் மட்டுமே பங்கேற்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.