அலகாபாத்,
முஸ்லிம் மதத்தில் ஒருவர் தனது மனைவியை விவாகரத்து செய்ய 3 முறை தலாக் கூறும் முத்தலாக் முறை அமலில் உள்ளது.
இது தொடர்பான வழக்கில் முத்தலாக் முறை அரசியல் சாசனத்துக்கு எதிரானது எனவும், முஸ்லிம் பெண்களின் உரிமைகளை பறிக்கிறது எனவும் அலகாபாத் ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்தது. இது தொடர்பான வழக்குகள் சுப்ரீம் கோர்ட்டில் உள்ளது, அதில் முத்தலாக் முறைக்கு ஆதரவாக அனைத்து இந்திய முஸ்லிம் தனிச்சட்ட வாரியமும், எதிராக மத்திய அரசும் வாதிட்டு வருகின்றன. இஸ்லாமிய பெண்கள் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் முத்தலாக்கிற்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டு உள்ளது.
இந்நிலையில் முத்தலாக் விவகாரம் தொடர்பான ஒரு வழக்கில் தன்னுடைய தீர்ப்பை வழங்கி உள்ள அலகாபாத் உயர்நீதிமன்றம், தனிச்சட்டம் மக்களின் அடிப்படை உரிமைகளை மீற முடியாது என உத்தரவிட்டு உள்ளது.
தனிச்சட்டம் என்ற பெயரில், இந்திய அரசியலமைப்பின் 14,15 மற்றும் 21 வது பிரிவுகளை அடிப்படை உரிமைகள் யாரும் மீறமுடியாது என அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. பெண்களுக்கு மதிப்பளிக்கவில்லை என்றால் சமூதாயத்தை நாகரீகமானவர்கள் என கூறமுடியாது.
உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியை சேர்ந்த சுமாலியா என்பவர் முத்தலாக் கூறி விவகாரத்து செய்த கணவர் ஜாமில்லுக்கு எதிராக வழக்கு தொடர்ந்து உள்ளார். வரதட்சணை கோரி சுமாலியாவை ஜாமில் கொடுமை செய்து உள்ளார். வரதட்சணை கொடுக்க முடியாது என சுமாலியா தரப்பில் தெரிவிக்கப்பட்டதும் அவரை ஜாமில் முத்தலாக் கூறி விவகாரத்து செய்துவிட்டார். தன்னை கொடுமை செய்த ஜாமில்லுக்கு எதிராக கிரிமினல் வழக்குப்பதிவு செய்யப்பட வேண்டும் என சுமாலியா போராடி வருகிறார். தனக்கு எதிராக கிரிமினல் வழக்கு முன்னெடுக்கப்படுவதற்கு எதிராக ஜாமில் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் என்னுடைய மனைவிக்கு தலாக் கொடுத்துவிட்டேன், எனக்கு பத்வா கொடுக்கப்பட்டு உள்ளது என தெரிவிக்கப்பட்டது.
அதனை நிராகரித்த உயர்நீதிமன்றம் பத்வாவிற்கு சட்டப்பூர்வமான அந்தஸ்து கிடையாது, சட்டவிரோதமானதுஎன கூறிஉள்ளது.
வழக்கு விசாரணை கடந்த ஏப்ரல் மாதம் 19-ம் தேதி முடிந்தது. இன்று தீர்ப்பு வழங்கிய தனிநபர் பெஞ்ச் நீதிபதி கேசர்வானி, பாலின அடிப்படையில் யாரும் அடிப்படை உரிமைகளை மீற முடியாது மற்றும் வேறுபாடுகள், மனித உரிமைகள் மீறல் இருப்பதால் இஸ்லாமிய கணவர்கள் அவர்களுடைய மனைவிகளை விவகாரத்து செய்ய முடியாது என கூறிஉள்ளார். இஸ்லாமியர்களின் திருமணம் இருவரது சம்மதத்துடன் நடக்கிறது, அதனை கணவரால் மட்டும் முடிவுக்கு கொண்டுவர முடியாது எனவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.