புதுடெல்லி,
பீகார் சட்டசபையின் பதவி காலம் முடிவடைய இருப்பதால், அங்கு இந்த ஆண்டில் இறுதியில் தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், கொரோனா தொற்று பரவல் கட்டுப்பாட்டுக்குள் வந்து நிலைமை முழுமையாக சீரடையும் வரை பீகார் சட்டசபை தேர்தலை நடத்தக் கூடாது என்று தலைமை தேர்தல் கமிஷனருக்கு உத்தரவு பிறப்பிக்க கோரி அவினாஷ் தாக்கூர் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்தார்.
இந்த மனு நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான அமர்வு முன்பு நேற்று காணொலி காட்சி மூலம் விசாரணைக்கு வந்தது. அப்போது கொரோனா நோய்த்தொற்றை காரணமாக வைத்து தேர்தலை நடத்தக்கூடாது என கூற முடியாது என்று தெரிவித்த நீதிபதிகள், தேர்தல் தேதி அறிவிக்கப்படாத நிலையில் தேர்தலை ஒத்திவைக்குமாறு எப்படி கூற முடியும் என்றும் கேட்டனர். அத்துடன், தேர்தல் நடத்துவது பற்றிய தேர்தல் கமிஷனின் அதிகாரத்தில் கோர்ட்டு தலையிட முடியாது என்றும், தேர்தல் கமிஷன் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் கூறி மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.