தேசிய செய்திகள்

திருமண நிகழ்ச்சியில் கொண்டாட்டத்திற்காக துப்பாக்கியால் சுட்டதில் புகைப்படக்காரர் பலி

திருமண நிகழ்ச்சியில் கொண்டாட்டத்திற்காக துப்பாக்கியால் சுட்டதில் படம் எடுத்த புகைப்படக்காரர் பலியானார். #CelebratoryFiring

போபால்,

மத்திய பிரதேசத்தின் போபால் நகரில் கோவிந்த்புரா பகுதியில் திருமண நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இதில் சவுரப் மீனா (வயது 34) என்ற புகைப்படக்காரர் திருமண நிகழ்ச்சிகளை படம் பிடித்து கொண்டு இருந்துள்ளார்.

இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் நபரொருவர் கொண்டாட்டத்திற்காக துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் சவுரப் மீது ஒரு குண்டு பாய்ந்தது. இதனை தொடர்ந்து அவரை உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் அவர் உயிரிழந்து விட்டார் என மருத்துவர்கள் தெரிவித்து விட்டனர். இதனையடுத்து புருஷோத்தம் திவாரி என்பவர் மீது தற்செயலாக சுட்டார் என்று வழக்கு பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணையும் நடத்தி வருகின்றனர்.

இதேபோன்று உத்தர பிரதேசத்தின் முசாபர்நகரில் திருமண நிகழ்ச்சியில் கொண்டாட்டத்திற்காக ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் வீட்டில் படித்து கொண்டிருந்த ஒரு சிறுமிக்கு காயம் ஏற்பட்டது.

மத்திய பிரதேசத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குழந்தை பிறந்ததற்கு நடந்த நிகழ்ச்சியில் கொண்டாட்டத்திற்காக உறவினர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் அதன் தந்தை உயிரிழந்து விட்டார்.