புதுடெல்லி,
இந்தியாவில் பொறியியல் துறையில் முன்னணி வகிக்கும் எல்&டி நிறுவனத்திடம், அரசியல் தலைவர்கள் பயணிப்பதற்கான தனி விமானங்களை எல்லை பாதுகாப்பு படையின் விமானப்படை பிரிவு வாங்கி வருகிறது. அதில் விமானியாக பணியாற்றுவதற்கு, சுமார் 1000 மணி நேரம் விமானத்தை செலுத்திய அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
இந்நிலையில் இரண்டு மாதங்களுக்கு முன்பு எல்&டி நிறுவனத்திற்கு எல்லை பாதுகாப்பு படையின் விமானப்படை பிரிவிலிருந்து பல மின்னஞ்சல்கள் வந்துள்ளன. அதில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் விமானத்திற்கு விமானியாக முன்னாள் விமான படை அதிகாரி ஜே.எஸ்.சாங்வானை நியமிக்குமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் அதில், சாங்வான் 4000 மணி நேரம் விமானம் செலுத்திய அனுபவம் பெற்றவர் என்றும் கூறப்பட்டிருந்தது.
இதைத்தொடர்ந்து அமித்ஷாவின் சென்னை-டெல்லி பயணத்தின் போது விமானத்தை செலுத்த சாங்வான் அனுமதிக்கப்பட இருந்த நிலையில், ஒரு மூத்த அதிகாரியின் பெயரில் சாங்வான் பொய்யான மின்னஞ்சல்களை அனுப்பியது வெளிச்சத்துக்கு வந்தது. அதைத் தொடர்ந்து, இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் உள்ள காவல் நிலையத்தில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
எல்லை பாதுகாப்பு படையின் விமான பிரிவில் விமானியாக இருந்து ஓய்வு பெற்றவர் சாங்வான். இவர் கார்கில் போரில் பங்கேற்றுள்ளார். இந்நிலையில் பொய்யான தகவல்களை கூறி அமித்ஷாவின் விமானத்தை இயக்க இவர் ஏன் ஆர்வம் காட்டினார் என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.