புதுடெல்லி,
டெல்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் ஆசிரியர் சங்கம் சார்பில் பொதுக்கூட்டம் நடந்து கொண்டு இருந்தது. அப்போது, அங்கு முகமூடி அணிந்து வந்த மாம ஆசாமிகள் இரும்பு கம்பி, கம்பு போன்றவற்றால் மாணவர்களை சரமாரியாக தாக்கினர். இந்த தாக்குதலில் பலர் காயம் அடைந்தனர்.
நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை இந்த தாக்குதல் ஏற்படுத்தியது. சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து இருந்தனர். தாக்குதல் தொடர்பாக டெல்லி காவல்துறை வழக்குப்பதிவு செய்து தாக்குதல் நடத்தியவர்களை தேடி வந்த நிலையில், டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தேச விரோத செயல்கள் அதிகம் நடப்பதால், நாங்கள் தான் இந்த தாக்குதலை நடத்தினோம் என்று இந்து ரக்ஷா தள் அமைப்பின் தலைவர் பிங்கி சவுத்ரி தெரிவித்துள்ளார்.
ஹிந்து ரக்ஷா தள் அமைப்பினர்தான் இந்த தாக்குதலை நடத்தினார்களா? என்று விசாரணை நடத்தி வருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.