தேசிய செய்திகள்

‘கிடைக்கும் இடத்தில் எல்லாம் மரத்தை நடுங்கள்’ உள்துறை மந்திரி அமித்ஷா வேண்டுகோள்

கிரீன் ரிட்ஜ் டெல்லியின் நுரையீரலாக மாறி சுற்றுச்சூழலை பாதுகாக்கும் என்றும் கூறினார்.

புதுடெல்லி,

டெல்லி அரசின் பசுமை இயக்கம் சார்பில் 70 லட்சம் மரக்கன்றுகளை நடும் திட்டம் நேற்று தொடங்கி வைக்கப்பட்டது. சென்டிரல் ரிட்ஜ் பகுதியில் நடை பெற்ற இந்த நிகழ்ச்சியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஒரு மரக்கன்றை நட்டு, திட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் மத்திய சுற்றுச்சூழல் துறை மந்திரி பூபேந்தர் யாதவ், டெல்லி முதல்-மந்திரி ரேகா குப்தா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மரக்கன்று

நிகழ்ச்சியில் உள்துறை மந்திரி அமித்ஷா பேசுகையில், "டெல்லிவாசிகள் அனைவரும் பசுமை இயக்க இணையதளத்தில் உள்நுழைந்து, மரம் நடுவதற்கான உங்கள் நேரத்தை முன்பதிவு செய்து, உங்கள் குடியிருப்புப் பகுதி, பள்ளி, கோவில்கள் என உங்களுக்கு கிடைக்கும் இடங்களில் எல்லாம் ஒரு மரக்கன்றை நட்டு, பசுமை டெல்லியின் கனவை நனவாக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த இணையதளம் உங்களுக்கு ஒரு இலவச மரக்கன்றை வழங்கும்" என்றார்.

சுற்றுச்சூழல்

மேலும் அவர், "டெல்லி அரசின் மீதமுள்ள 4 ஆண்டுகளில், 6,300 ஹெக்டேர் பரப்பளவுள்ள கிரீன் ரிட்ஜ் வனப்பகுதியில் மரங்களை நட்டு, அவற்றைப் பாதுகாப்பதை உறுதிசெய்து, அதனை முழுமையாக்குவோம். இந்த 6300 ஹெக்டேர் கிரீன் ரிட்ஜ், டெல்லியின் நுரையீரலாக மாறி, டெல்லியின் சுற்றுச்சூழலை பாதுகாக்கும்" என்றும் கூறினார்.