டோக்கியோ,
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான 16வது பாராஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில், இன்று நடந்த ஆடவர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் எஸ்.எச்.1 துப்பாக்கி சுடுதல் இறுதி போட்டியில் இந்திய வீரர் சிங்ராஜ் அதானா 3வது இடம் பிடித்து வெண்கல பதக்கம் வென்றுள்ளார்.
அவர் மொத்தம் 216.8 புள்ளிகள் குவித்து உள்ளார். அவருடன் இறுதி போட்டியில் விளையாடிய மற்றொரு இந்திய வீரர் மணீஷ் நார்வால் 7வது இடம் பிடித்து உள்ளார். தகுதி சுற்றில் நார்வால் முதல் இடத்தில் இருந்த நிலையில், சிங்ராஜ் 6வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
வெண்கல பதக்கம் வென்ற இந்திய வீரருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார். இதுபற்றி டுவிட்டரில் அவர் வெளியிட்டு உள்ள வாழ்த்து பதிவில், சிறந்த முறையில் செயலாற்றியுள்ளார் சிங்ராஜ் அதானா!
இந்தியாவின் திறமை வாய்ந்த துப்பாக்கி சுடுதல் வீரர் நாட்டுக்கு, பெருமைமிகு வெண்கல பதக்கம் கொண்டு வந்துள்ளார். மிக கடுமையாக உழைத்து, குறிப்பிடத்தக்க வெற்றியை சாதித்துள்ளார். அவருக்கு வாழ்த்துகள். வருங்கால முயற்சிகளை முன்னெடுக்கவும் வாழ்த்துகள் என தெரிவித்து உள்ளார்.