இம்பால்,
நேபாளத்தில் ஊழல், வேலைவாய்ப்பின்மை உள்பட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து அரசுக்கு எதிராக கடந்த 8ம் தேதி இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக, சமூகவலைதளங்களை நேபாள அரசு முடக்கியது போராட்டத்திற்கு முக்கிய காரணமாக அமைந்தது.
அரசுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்ததையடுத்து பிரதமர் கே.பி.சர்மா ஒலி பதவியை ராஜினாமா செய்தார். இதன் மூலம் நேபாளத்தில் கே.பி.சர்மா தலைமையிலான அரசு கவிழ்ந்தது. இதையடுத்து, ராணுவம் கட்டுப்பாட்டில் நேபாளம் சென்றது.
பின்னர், போராட்டக்குழுவினர், ஜனாதிபதி, ராணுவம் இணைந்து நடத்திய பேச்சுவார்த்தைக்குப்பின் நேபாளத்தில் இடைக்கால அரசு அமைய ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும், இடைக்கால அரசின் பிரதமராக சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி சுசீலா கார்கி தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, நேபாளத்தின் பிரதமராக சுசீலா கார்கி நேற்று பதவியேற்றார்.
இந்நிலையில், சுசீலா கார்கிவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி கூறியதாவது, நேபாளம் இந்தியாவின் மிகவும் நெருங்கிய நண்பன். நேபாள இடைக்கால அரசின் பிரதமராக பொறுப்பேற்றுள்ள சுசீலா கார்கிவுக்கு 140 கோடி இந்தியர்கள் சார்பில் எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். நேபாளத்தின் முதல் பெண் பிரதமராக சுசீலா கார்கி பொறுப்பேற்றுள்ளது பெண்களின் முன்னேற்றத்திற்கான சிறந்த உதாரணம் என்றார்.