ஹைலகண்டி
அசாம் மாநில சட்டசபைக்கு ஏப்ரல் 9-ந்தேதி ஒரே கட்டத்தில் தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 4-ந்தேதி நடைபெறும். இதனை முன்னிட்டு, அரசியல் கட்சிகள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு, பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இதில், ஆளும் பா.ஜ.க.வை சேர்ந்த பிரதமர் மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பிரசாரம் மேற்கொண்டு மக்களிடையே பேசி வருகின்றனர். இதில், பிரதமர் மோடி நேற்று திப்ரூகார் மாவட்டத்தில் பேசும்போது காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடினார்.
இந்நிலையில், அசாம் மாநிலத்தின் ஹைலகண்டி மாவட்டத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இன்று கலந்து கொண்டு பேசினார். அவர் பேசும்போது, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, அசாமிலுள்ள 11 ஆயிரம் இளைஞர்களை ஆயுதங்களை கீழே போட்டு விட்டு, பயங்கரவாத செயல்களை விடுத்து, இயல்பு வாழ்க்கைக்கு கொண்டு வந்துள்ளது.
போடோலேண்ட் மற்றும் தடை செய்யப்பட்ட உல்பா அமைப்புகளுடன் அமைதி ஒப்பந்தங்களை ஏற்படுத்தி, அசாமை ஒரு வளர்ச்சியடைந்த மாநிலங்களில் ஒன்றாக மாற்ற பணியாற்றி உள்ளோம்.
அடுத்த 5 ஆண்டுகளில், அசாமை வெள்ள பாதிப்பில் இருந்து விடுவிக்கும் வகையில், பல பெரிய குளங்களை கட்ட உள்ளோம். ஊடுருவல்காரர்களை தடுத்து நிறுத்துவதன் வழியே மட்டுமே அசாமில் வளம் ஏற்படுத்த முடியும். அந்த வேலையை பா.ஜ.க.வால் மட்டுமே செய்ய முடியும் என்று அவர் கூறினார்.