புதுடெல்லி
பின்லாந்து ஜனாதிபதி அலெக்சாண்டர் ஸ்டப் இந்தியாவில் 4 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக டெல்லிக்கு நேற்று வந்தடைந்த அவரை மத்திய வெளிவிவகார துறை இணை மந்திரி கீர்த்தி வர்தன் சிங் நேரில் வரவேற்றார்.
அவருடைய இந்த பயணத்தின் ஒரு பகுதியாக, பிரதமர் மோடியை இன்று சந்தித்து பேசினார். இந்நிலையில், பின்லாந்து ஜனாதிபதி ஸ்டப் மற்றும் பிரதமர் மோடி இருவரும் டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில், கூட்டாக நிருபர்கள் சந்திப்பை நடத்தினர். அதில், பிரதமர் மோடி பேசும்போது, இந்தியாவும், பின்லாந்தும் சட்டத்தின் ஆட்சி, பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திர நடவடிக்கையில் நம்பிக்கை கொண்டுள்ளன.
எந்தவொரு விவகாரத்திலும் ராணுவ மோதலால் தீர்வு காண கூடாது என நாங்கள் ஒப்பந்தம் செய்துள்ளோம். அது உக்ரைனோ அல்லது மேற்காசியாவோ, மோதல்களை விரைவில் முடிவுக்கு கொண்டு வருவதற்கும், அமைதியை நோக்கிய ஒவ்வொரு முயற்சிக்காகவும் தொடர்ந்து நாங்கள் ஆதரவளிப்போம் என பேசினார்.
இதனையடுத்து, பின்லாந்து ஜனாதிபதி ஸ்டப் பேசும்போது, உலக அரங்கில் வளர்ந்து வரும் இந்தியாவை புகழ்ந்து பேசினார். நாம் எல்லோரும் இன்னும் கொஞ்சம் கூடுதலாக இந்தியராக வேண்டும் என அப்போது கூறினார். இந்தியாவின் வெளியுறவு கொள்கை அணுகுமுறையில் இருந்து உலக நாடுகள் கற்று கொள்ளலாம் என்றும் கூறினார்.
உலகின் மிக பெரிய மற்றும் அதிக செல்வாக்கான மற்றும் பெரிய ஜனநாயகம் கொண்ட நாடு இந்தியா. ஐரோப்பிய ஒன்றியத்திற்கு நீங்கள் தற்போது ஒரு முக்கிய நட்பு நாடாகி விட்டீர்கள் என்றும் புகழ்ந்து பேசினார். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை ஒரு பொருளாதார அற்புதம் என்றும் ஸ்டப் குறிப்பிட்டார்.
அப்போது, டிரையத்லான் போட்டிகளில் 57 வயதுடைய ஸ்டப் கலந்து கொண்டது பற்றி பிரதமர் மோடி பெருமையாக குறிப்பிட்டார். துடிப்பான உங்களை போன்ற தலைவரால், நாம் புதிய கண்டுபிடிப்பு, டிஜிட்டல் மற்றும் நீடித்த வளர்ச்சி என்ற புதிய டிரையத்லானில் சாதனை படைப்போம் என்றும் பேசினார்.
டிரையத்லான் போட்டி என்பது ஒரே நாளில் 3.86 கி.மீ. நீந்தி சென்று, 180.2 கி.மீ.பைக் பயணம் மற்றும் 42.2 கி.மீ. மாரத்தான் ஓட்டம் என அடுத்தடுத்து மேற்கொண்டு முடிக்க வேண்டும். ஒரே நாளில் நடத்தி முடிக்கப்படும் இந்த போட்டி உலக அளவில் சவாலான ஒன்றாக கருதப்படுகிறது.