கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

முப்படைகளுக்கு உள்நாட்டில் தயாரித்த தளவாடங்கள்: மோடி நாளை வழங்குகிறார்

முப்படைகளுக்கு உள்நாட்டில் தயாரித்த தளவாடங்களை பிரதமர் நரேந்திர மோடி நாளை வழங்க உள்ளார்.

புதுடெல்லி,

ஆத்மநிர்பார் பாரத் என்னும் தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் நமது நாட்டில் ராணுவ தளவாடங்கள் தயாரிக்கப்படுகின்றன. அந்த வகையில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டுள்ள ராணுவ தளவாடங்கள், முப்படைகளுக்கும் வழங்கப்பட இருக்கின்றன. டெல்லியில் நாளை 19-ந் தேதி நடக்கிற விழாவில் முப்படைகளுக்கும், முற்றிலும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தளவாடங்களை பிரதமர் மோடி வழங்குகிறார்.

அந்த வகையில் அவர் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் வடிவமைத்து தயாரித்துள்ள லகுரக போர் விமானத்தை விமானப்படை தளபதி வி.ஆர்.சவுத்ரியிடம் முறைப்படி ஒப்படைக்கிறார்.

உள்நாட்டில் உள்ள ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் வடிவமைத்து தயாரித்துள்ள டிரோன்களை ராணுவ தளபதி நரவனேயிடம் ஒப்படைக்கிறார். ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் டி.ஆர்.டி.ஓ. மற்றும் பாரத் எலெக்டிரானிக்ஸ் நிறுவனம் போர் கப்பல்களுக்காக கூட்டாக தயாரித்துள்ள அதிநவீன மின்னணு போர் கருவிகளை கடற்படை கருவிகளை கடற்படை தளபதி கரம்பீர்சிங்கிடம் வழங்குகிறார். இந்த கருவிகள் நாசகார கப்பல்களிலும் பயன்படுத்தப்படத்தக்கது. மேலும், ரூ.400 கோடி மதிப்பில் உத்தரபிரதேச பாதுகாப்பு தொழில்துறை தாழ்வாரத்தின் ஜான்சி முனை திட்டத்துக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.