புதுடெல்லி,
பிரதமர் மோடி இன்று வடகிழக்கு மாநிலங்களான மணிப்பூர் மற்றும் திரிபூராவுக்கு செல்கிறார். இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
பிரதமர் நரேந்திர மோடி இன்று (செவ்வாய்கிழமை) மணிப்பூர் மற்றும் திரிபூரா மாநிலங்களில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
மணிப்பூரில் ரூ.4,800 கோடி மதிப்பிலான 22 வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. தலைநகர் இம்பாலில் ரூ.1850 கோடியில் 13 வளர்ச்சி திட்டங்களை பிரதமர் தொடங்கி வைக்கிறார். மேலும், அங்கு புதுப்பிக்கப்பட்ட கோவிந்தா ஜி கோயிலையும் திறந்து வைக்க உள்ளார்.
மேலும், திரிபூரா மாநிலத்தில் தலைநகர் அகர்தலாவில் மகராஜா பீர் பிக்ரம் விமானநிலையத்தில் ரூ.450 கோடியில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கட்டிடத்தை பிரதமர் இன்று திறந்து வைக்கிறார். இது 30,000 சதுர மீட்டர் பரப்பளவில் நவீன வசதிகளுடன் கூடிய நவீன கட்டிடம் ஆகும். முதல்-மந்திரி திரிபுரா கிராம சம்ரிதி திட்டங்களை பிரதமர் தொடங்கி வைக்கிறார்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.