புதுடெல்லி,
தூய்மை இந்தியா மற்றும் உள்நாட்டு பாதுகாப்பை முக்கியமானதாக கொண்டு அனைத்து மாநில கவர்னர்கள் பங்கேற்கும் 49-வது மாநாடு ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது.
இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாடு மொத்தம் 6 அமர்வுகளாக நடைபெறுகிறது. மநாட்டின் இறுதி நாளான இன்று பிரதமர் மோடி, கவர்னர்கள் மத்தியில் உரையாற்றினார்.
பிரதமர் மோடி பேசியதாவது:- மாநிலங்களுக்கு இடையே நல்லிணக்கம், ஒருங்கிணைப்பை கவர்னர்கள் வலுப்படுத்த வேண்டும். பல்கலைக்கழங்கள் கல்வியில் சிறந்து விளங்குவதை ஊக்கப்படுத்த ஆக்கப்பூர்வமான பங்களிப்பை கவர்னர்கள் ஆற்ற வேண்டும். உலகளவில், இந்திய பல்கலைகழகங்கள் தலைசிறந்தவையாக உருவெடுக்க கவர்னர்கள் முக்கிய பங்காற்ற வேண்டும்.
சாதாரண மனிதன் சுமூகமான வாழ்வியல் முறையை பெற அரசு முயற்சித்து வருகிறது. கவர்னர்கள், தங்களது அனுபவத்தை பயன்படுத்தி அரசு துறைகள் மற்றும் சிவில் அமைப்புகளை அதனை நோக்கி உழைக்க வைக்க வேண்டும். இந்தியா 2022-ல், 75-வது ஆண்டு சுதந்திர தினம் கொண்டாடப்படும் போதும், 2019-ல் மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது, வளர்ச்சின் இலக்கு மற்றும் லட்சியத்தை எட்ட வேண்டும் இவ்வாறு அவர் பேசினார்.