புதுடெல்லி,
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பிரதமர் மோடி ஆகியோரின் வெளிநாட்டு பயணங்களின் ஒட்டுமொத்த செலவு விவரங்களையும் கேட்டு தகவல் அறியும் உரிமை ஆர்வலரான நுதன் தாகூர் பிரதமர் அலுவலகத்திற்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனு தாக்கல் செய்தார். ஜூன் 16 ஆம் தேதி இந்த விண்ணப்பத்தை நுதன் தாகூர் அனுப்பியிருந்தார்.
அந்த மனுவில் கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங், பிரதமர் மோடி ஆகிய இருவரும் மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்களுக்கான மேற்கொள்ளப்பட்ட அனைத்து ஏற்பாடுகளின் செலவு விவரங்களை அளிக்குமாறு கோரியிருந்தார்.
ஆனால், கடந்த வியாழக்கிழமை மத்திய தகவல் ஆணையமும் பிரதமர் அலுவலக செயலருமான பிரவீன் குமாரும் தகவல் அளிக்க மறுத்துவிட்டனர். கோரப்பட்ட தகவல்கள் அனைத்தும் தெளிவற்றதாகவும் மிகவும் பரவலாகவும் இருப்பதாக கூறி பதிலளிக்க மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.