மும்பை
மும்பை வைரவியாபாரி நிரவ் மோடி பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளை மூலம் ரூ.11,700 கோடிக்கு மோசடி செய்து வெளிநாட்டுக்கு குடும்பத்துடன் தப்பிச் சென்று விட்டார்.
சி.பி.ஐ. புகார் தெரிவித்த உடனேயே கடந்த ஜனவரி 1-ந்தேதி அவர் தலைமறைவாகி விட்டது தெரியவந்துள்ளது. தற்போது அவர் அமெரிக்காவில் நியூயார்க் நகரில் உள்ள ஆடம்பர சொகுசு ஓட்டலில் தங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நிரவ் மோடியுடன் உறவினர் மெகுல் சோக்ஷி மற்றும் குடும்பத்தினர் தங்கி உள்ளனர். இவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கையில் சி.பி.ஐ. ஈடுபட்டுள்ளது. இதற்காக சர்வதேச போலீஸ் உதவியை நாடியுள்ளது. இதற்காக நேச நாட்டைச் சேர்ந்த குற்றவாளி ஒருவரை கண்டுபிடிக்க பிறப்பிக்கப்படும் பரவல் அறிவிப்பை வெளியிடுமாறு சர்வதேச போலீசை சி.பி.ஐ. கேட்டுக் கொண்டுள்ளது. இதன்மூலம் ஓரிரு நாட்களுக்குள் நிரவ் மோடி மற்றும் அவரது குடும்பத்தினரின் இருப்பிடத்தை கண்டிபிடித்து கைது செய்து விடுவோம் என்று சி.பி.ஐ. அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.
இதற்கிடையே இந்த மோசடியில் நிரவ் மோடிக்கு உடந்தையாக செயல்பட்ட பஞ்சாப் நேஷனல் வங்கி அதிகாரிகள் 4 பேரை வங்கி நிர்வாகம் சஸ்பெண்டு செய்தது. அவர்களிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது.
தற்போது இதில் பொதுமேலாளர் அந்தஸ்து அதிகாரி ஒருவர் உள்பட 8 அதிகாரிகள் மீது சஸ்பெண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் பஞ்சாப் நேஷனல் வங்கியானது மற்ற வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை வருகிற மார்ச் மாத்துக்குள் திருப்பிச் செலுத்தவும் நிதித்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கியின் முன்னாள் துணை பொது மேலாளர் கோகுல்நாத், மனோஜ் கரத் மற்றும் ஹேமந்த் பட் ஆகியோரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட 3 பேரையும் இன்று மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ அதிகாரிகள் ஆஜர்படுத்த உள்ளனர்.