புதுடெல்லி,
பஞ்சாப் நேஷ்னல் வங்கி மோசடியில் சிக்கிய வைர வியாபாரி நிரவ் மோடி பிரதமர் மோடியுடன் தாவோஸ் நகரில் எடுத்துக் கொண்ட புகைப்படம் வெளியாகி உள்ளது. மோசடி தொடர்பாக காங்கிரஸ் மற்றும் பாரதீய ஜனதா இடையே மோதல் எழுந்து உள்ளது.
இந்நிலையில் மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் பேசுகையில், தாவோஸ் உலக பொருளாதார கருத்தரங்கில் பிரதமர் மோடியுடைய குழுவில் நிரவ் மோடி கிடையாது. நிரவ் மோடி சிஐஐ [இந்திய தொழில்துறை கூட்டமைப்பு] குழுவில் இடம்பெற்று இருந்தார், என விளக்கம் அளித்து உள்ளார். நிரவ் மோடியின் பாஸ்போர்ட் ரத்து செய்யப்பட்டது. அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் விடுக்கப்பட்டு உள்ளது. அவருடைய ரூ.1,300 கோடி மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
வங்கி மோசடி வழக்கில் குற்றவாளிகள் மற்றும் அவர்களுக்கு உதவியவர்கள் தப்பிக்க முடியாது என ரவிசங்கர் பிரசாத் குறிப்பிட்டு உள்ளார்.
ஆனால் வங்கி மோசடி தொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு மற்றும் லுக் அவுட் நோட்டீஸ் விடுப்பதற்கு முன்னதாகவே வைர வியாபாரி நிரவ் மோடி ஜனவரி 1-ம் தேதியே நாட்டைவிட்டு வெளியேறிவிட்டார் என போலீஸ் தரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.
வைர வியாபாரி நிரவ் மோடியின் பாஸ்போர்ட் ரத்து செய்யப்பட்டது என ஆல் இந்தியா ரேடியோவும் டுவிட்டரில் குறிப்பிட்டு உள்ளது.