புதுடெல்லி,
மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளை மூலம் ரூ.13 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி, வெளிநாட்டுக்கு தப்பி சென்றுள்ளார். அவருக்கு எதிராக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நிரவ் மோடிக்கு எதிராக நிதி மோசடி தடுப்பு சட்டம் மற்றும் பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.
இந்த வழக்குகள் விசாரணை மும்பையில் உள்ள சிறப்பு கோர்ட்டில் நடந்து வருகிறது. இதில் பலமுறை அவருக்கு சம்மன் அனுப்பியும், அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இந்த நிலையில் இந்திய வங்கிகளில் இருந்து கோடிக்கணக்கில் கடன்பெற்று மோசடியில் ஈடுபடும் தொழிலதிபர்கள் வெளிநாடுகளுக்கு தப்பிச்செல்வதை தடுக்கும் வகையில் புதிய சட்டத்தை மத்திய அரசு சமீபத்தில் நிறைவேற்றியது. அதன்படி இப்போது நடவடிக்கையை அமலாக்கப்பிரிவு தொடங்கியுள்ளது.
உங்களை ஏன் தப்பி ஓடிய குற்றவாளி என அறிவிக்கக்கூடாது? என்றும், உங்கள் சொத்துகளை ஏன் பறிமுதல் செய்யக்கூடாது? என்றும் செப்டம்பர் 25ந் தேதிக்கு முன் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என மும்பை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே நிரவ் மோடிக்கு எதிராக இன்டர்போலும் நடவடிக்கையை எடுத்து வருகிறது. நிரவ் மோடியை நாடு கடத்தக்கோரும் மத்திய அரசின் கடிதம் இங்கிலாந்திடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில் சிங்கப்பூரில் குடியுரிமை மற்றும் பாஸ்போர்ட் கோரி நிரவ் மோடி தாக்கல் செய்த விண்ணப்பத்தை அந்நாட்டு அரசு நிராகரித்தது என தகவல்கள் வெளியாகியுள்ளது.