புதுடெல்லி,
பஞ்சாப் நேஷனல்வங்கியில் ரூ.11,400 கோடி சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்து வைர வியாபாரி நிரவ் மோடி மோசடி செய்ததாக அந்த வங்கி சிபிஐயிடம் புகார் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சிபிஐ அமைப்பு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. மேலும், நிரவ் மோடியின் ரூ. 5 ஆயிரம் கோடிக்கும் அதிகமான சொத்துக்களை அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இந்நிலையில் நிரவ் மோடியின் நிறுவனத்தில் நிதிநிலவரங்களைக் கையாண்டு வந்த உயரதிகாரி விபுல் அம்பானி உட்பட 5 அதிகாரிகளை சிபிஐ நேற்று கைது செய்தது.
பஞ்சாப் நேஷனல் வங்கி அதிகாரிகளிடம் சிபிஐ தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தது. இந்த நிலையில், பஞ்சாப் நேஷனல் வங்கியின் பொது மேலாளர் பொறுப்புக்கு இணையான அந்தஸ்து கொண்ட அதிகாரியான ராஜேஷ் ஜிந்தாலை சிபிஐ கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்ட ராஜேஷ் ஜிந்தால் பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை பிராந்திய தலைமை அதிகாரியாக கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் 2011 வரை பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.