தேசிய செய்திகள்

காஷ்மீரில் போலீஸ் வாகனம் மீது குண்டுவீச்சு; 16 பேர் படுகாயம்

காஷ்மீரில் போலீஸ் வாகனம் மீது பயங்கரவாதிகள் குண்டுவீசிய சம்பவத்தில் 16 பேர் படுகாயம் அடைந்தனர்.

ஜம்மு,

காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் உள்ள பட்போரா பகுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 4 போலீசார் போலீஸ் வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனர்.

அப்போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் போலீஸ் வாகனத்தின் மீது கையெறி வெடிகுண்டு ஒன்றை வீசினர். அது பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.

இதில் போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 4 போலீசாரும் பலத்த காயம் அடைந்தனர். மேலும் அந்த பகுதியில் நின்றுகொண்டிருந்த ஒரு சிறுமி உள்பட பொதுமக்களில் 12 பேரும் குண்டுவீச்சில் சிக்கி படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்த 16 பேரும் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

அவர்களில் ஒரு சிறுமியின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவள் மேல்சிகிச்சைக்காக ஸ்ரீநகர் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டு இருப்பதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

SCROLL FOR NEXT