புதுடெல்லி,
டெல்லியில் உள்ள ராணுவ காலனி பகுதியில் நேற்று காலை 2 பேர் நம்பர் பிளேட் இல்லாத மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.அப்போது, அந்த வழியாக பணிக்கு வந்து கொண்டிருந்த ராணுவ காலனி போலீஸ் நிலைய போலீஸ்காரர் நவீன் என்பவர் இதை கவனித்து, அந்த மோட்டார்சைக்கிளை துரத்தி சென்றார். மேலும் அந்த மோட்டார்சைக்கிளை பிடிப்பதற்காக உதவிக்கு மனீஸ் என்ற போலீஸ்காரரையும் அழைத்தார். இருவரும் அந்த மோட்டார்சைக்கிளை விரட்டி சென்றனர்.
இந்தநிலையில், அந்த மோட்டார்சைக்கிளில் இருந்த இருவரும் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
இதில் காலில் குண்டு பாய்ந்து போலீஸ்காரர் நவீன் காயம் அடைந்தார். இருப்பினும் விடாமல் போலீசார் இருவரும் அந்த ஆசாமிகள் இரண்டு பேரையும் மடக்கி பிடித்தனர். அவர்களிடம் இருந்த துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் அவர்களது பெயர் தர்மேந்தர், நவ்தீப் என்பது தெரியவந்தது. இருவரிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.