தேசிய செய்திகள்

நாட்டின் ஒற்றுமைக்கு பெரிய அச்சுறுத்தலாக அரசியல் வெறுப்புணர்வு உள்ளது: பரூக் அப்துல்லா

நாட்டின் ஒற்றுமைக்கு பெரிய அச்சுறுத்தலாக அரசியல் வெறுப்புணர்வு உள்ளது என தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா கூறியுள்ளார்.

ஜம்மு,

ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா தனது கட்சியின் தலைமையகத்தில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டார். இக்கூட்டத்தில் கட்சியின் மூத்த தலைவர்களும் கலந்து கொண்டனர்.

அவர்கள் முன் அப்துல்லா பேசும்பொழுது, எந்த மதத்திற்கும் அச்சுறுத்தல் என்பது இல்லை. அப்படி ஆபத்து இருக்கிறது என்றால், மதவாத சக்திகளுக்கு அரணாக செயல்படும் அரசியல் வெறுப்புணர்வாக அது இருக்கும் என கூறினார்.

தொடர்ந்து அவர், அரசியல் வெறுப்புணர்வில் நம்பிக்கை கொண்டவர்கள் ஜம்மு மற்றும் காஷ்மீரில் இருந்து தொலைவில் இருங்கள். அது நல்லுறவை வளர்த்தல் மற்றும் மதநல்லிணக்கத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

அவர், மாநிலத்தில் அடிமட்டம் வரை ஜனநாயகம் வலுப்படுவதற்கு முக்கிய விசயம் ஆக உள்ளாட்சி தேர்தல் இருக்கும் என கூறியுள்ளதுடன் இந்த பெரிய சவாலை எதிர்கொள்ள தயாராக இருக்கும்படியும் அறிவுறுத்தியுள்ளார்.