புதுடெல்லி,
நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2வது அலை மிகத் தீவிரமாக பரவி வருவதால், அதனை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பல்வேறு மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகளில் நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டும், ரத்து செய்யப்பட்டும் வருகின்றன.
இதற்கிடையில் ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த முதுநிலை நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர். மேலும் இந்த தேர்வை ரத்து செய்ய உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு ஒன்று நாளை விசாரணைக்கு வர இருக்கிறது.
இந்த நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தனது டுவிட்டர் பக்கத்தில் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெறவிருந்த முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். கொரோனா பரவல் காரணமாக, மருத்துவ மாணவர்களின் நலன் கருதி தேர்வு ஒத்திவைக்கப்படுவதாகவும், தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.