தேசிய செய்திகள்

ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சியில் பேசும் முன் ஹெட்கேவர் நினைவிடத்தில் பிரணாப் முகர்ஜி மரியாதை

ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சியில் பேசும் முன், அதன் நிறுவனரான ஹெட்கேவர் நினைவிடத்தில் பிரணாப் முகர்ஜி மரியாதை செலுத்தினார்.

மும்பை,

ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் பயிற்சி பெற்றவர்களுக்கான உபச்சார விழா இன்று நடக்கிறது. இதற்கான அழைப்பு முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு அனுப்பப்பட்டபோதே சர்ச்சை வெடித்தது. அவர் நிகழ்ச்சியில் பங்கேற்பது உறுதியானதும் ஏராளமான காங்கிரஸ் தலைவர்கள் தங்களது அதிருப்தியை அவருக்கு கடிதமாக எழுதியிருந்தனர்.

இந்நிலையில், சர்ச்சைகள் மற்றும் சலசலப்புகளுக்கு மத்தியில் பிரணாப் முகர்ஜி இன்று நாக்பூர் வந்தடைந்தார். ஆர்.எஸ்.எஸ் நிறுவனர் ஹெட்கேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய அவர், அங்கிருந்த குறிப்பேட்டில் பாரத மாதாவின் சிறந்த மகனுக்கு அஞ்சலி செலுத்த இங்கே வந்துள்ளேன் என எழுதி கையெழுத்திட்டார்.

பின்னர், ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் தலைவரான மோகன் பகவத் உடன் அவர் சிறிது நேரம் பேசினார். இதனை அடுத்து, ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சியில் பிரணாப் முகர்ஜி கலந்து கொண்டுள்ளார். ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் பயிற்சி முடித்தவர்கள் நடத்திய அணி வகுப்பையும் பிரணாப் முகர்ஜி பார்வையிட்டார்.