ஸ்ரீநகர்,
கொரோனாவுக்கு எதிராக அர்ப்பணிப்புடன் டாக்டர்கள் மற்றும் நர்சுகள் பணியாற்றி வரும் நிலையில், கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்து வந்த கர்ப்பிணிக்கு சிகிச்சை அளிக்க டாக்டர்கள் தாமதம் செய்ததால், அந்த பெண்ணும், வயிற்றில் இருந்த இரட்டை குழந்தைளும் பலியானதாக காஷ்மீரில் புகார் எழுந்துள்ளது. அங்குள்ள அனந்த்நாக் மாவட்டத்தின் கார்போரா கிராமத்தை சேர்ந்த ஒரு பெண் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.
அவருக்கு பிரசவ வலி ஏற்படவே, மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் நல மருத்துமனையில் நேற்று முன்தினம் காலையில் அனுமதிக்கப்பட்டார். இந்தநிலையில் மாலையில் அந்த பெண் பிரசவத்துக்கு முன்பே இறந்தார். இதனால் வயிற்றில் இருந்த இரட்டை குழந்தைகளும் பரிதாபமாக உயிரிழந்தன.
இதுகுறித்து அந்த பெண்ணின் குடும்பத்தினர் தாங்கள் ஹாட்ஸ்பாட் பகுதியில் (கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள இடம்) இருந்து வந்ததால் டாக்டர்கள் சிகிச்சை அளிக்க தாமதம் செய்ததாக குற்றம் சாட்டியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து 2 நாட்களில் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.