தேசிய செய்திகள்

வேளாண் மசோதாக்கள் விவாதமின்றி நிறைவேற்றப்பட்டதாக கூறுவது தவறு - மாநிலங்களவை தலைவர்

மாநிலங்களவை இன்று கூடியதும் வேளாண் மசோதாக்கள் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

புதுடெல்லி,

மாநிலங்களவை இன்று காலை 9 மணிக்கு கூடியது. அவை கூடியதும் இன்றைய அவை நடவடிக்கைகளை ஒத்திவைத்து வேளாண் மசோதாக்கள் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தரப்பில் ஒத்திவைப்பு தீர்மானம் கொடுக்கப்பட்டது.

ஆனால், இதை நிராகரித்த மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு, ஜனாதிபதி உரை தொடர்பான விவாதத்தை நாளை எடுத்துக்கொள்ளலாம் என்று கூறினார். ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால், மாநிலங்களவை 10.30 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

முன்னதாக, விவாதம் இன்றி வேளாண் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டதாக சில உறுப்பினர்கள் கூறியதை மறுத்த மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு, வேளாண் மசோதாக்கள் விவாதம் இன்றி நிறைவேற்றப்பட்டதாக கூறுவது தவறானது. வேளாண் சட்டங்கள் மீது மாநிலங்களவையில் 4 மணி நேரம் விவாதம் நடைபெற்றது. வேளாண் சட்டங்கள் பகுதியாக ஆய்வு செய்யப்பட்ட பிறகே நிறைவேற்றப்பட்டன என்றார்.