புதுடெல்லி,
நாடு முழுவதும் 71வது குடியரசு தின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு டெல்லி ராஜபாதையில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.
இந்த விழாவில் குடியரசு தின சிறப்பு விருந்தினராக பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சனரோ பங்கேற்றார். இதேபோன்று பிரதமர் மோடி, மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங், பிற துறைகளை சார்ந்த மத்திய மந்திரிகள், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், அவரது மனைவி குர்சரண் கவுர், சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி போப்டே மற்றும் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
இதன்பின் நடந்த ராணுவம், விமானம் மற்றும் கடற்படை ஆகிய முப்படையினரின் அணிவகுப்பு மரியாதையை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்று கொண்டார். இந்த அணிவகுப்பில் இந்திய ராணுவத்தின் டி - 90 பீஷ்மா, கே - 9 வஜிரா - டி வகை கவச வாகனங்கள் பங்கேற்றன. இலகு வகை ஹெலிகாப்டர்கள் வானில் பறந்து சென்று சாகசம் செய்தன. பின்னர் சீக்கிய படைகளின் அணிவகுப்பு, கடற்படையின் வாத்திய குழு அணிவகுப்பு நடைபெற்றது.
கடற்படையை சேர்ந்த நீண்டதூர ரோந்து விமானம் மற்றும் கொல்கத்தா வகையை சேர்ந்த போர் கப்பல் மற்றும் கல்வாரி வகை நீர்மூழ்கி கப்பல் ஆகியவற்றின் மாதிரிகள் அணிவகுப்பில் கலந்து கொண்டு காட்சிப்படுத்தப்பட்டன.