புதுடெல்லி,
மேற்கு வங்க மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் புகழ்பெற்ற மருத்துவருமான பிதன் சந்திரராய், மருத்துவத்துறைக்கு அளித்த பங்களிப்பை போற்றும் வகையில் ஒவ்வொரு வருடமும் ஜூலை 1 ஆம் தேதி தேசிய மருத்துவர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. பிதன் சந்திரராய் பிறந்ததும், மறைந்ததும் ஜூலை ஒன்றாம் தேதி தான். இந்திய மருத்துவ கவுன்சில் மற்றும் இந்திய மருத்துவ சங்கம் ஆகியவற்றை தோற்றுவித்ததில் இவரது பங்கு மிகப்பெரியது ஆகும்.
இதனை முன்னிட்டு இன்று நாடு முழுவதும் பலரும் மருத்துவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக தற்போதைய கொரோனா காலகட்டத்தில் மருத்துவர்கள் பலர் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல், குடும்பத்தினரை பல நாட்கள் பிரிந்து மருத்துவ சேவையில் ஈடுபட்டு வந்ததை காண முடிந்தது. இந்த சேவையில் பல மருத்துவர்கள் தங்கள் இன்னுயிரையும் இழந்துள்ளனர். அத்தகைய மருத்துவர்களை போற்றும் நாளாகவும், தேசிய மருத்துவர்கள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்நிலையில், இது தொடர்பாக பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கொரோனாவுக்கு எதிரான போரில் அனைத்து மருத்துவர்களும் மேற்கொள்ளும் பணியால் இந்தியா பெருமிதம் அடைவதாக தெரிவித்துள்ளார். மேலும் மருத்துவ தினமாக கடைபிடிக்கப்படும் ஜூலை 1 ஆம் நாளான இன்று மாலை 3 மணிக்கு இந்திய மருத்துவ கழகம் ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சியில் மருத்துவ சமூகத்துடன் தான் பேச உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.