புதுடெல்லி,
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, நோய் பாதிப்பு அதிகம் உள்ள, தமிழகம் உள்பட 10 மாநில முதல்வர்களுடன், இன்று காலை பிரதமர் மோடி, காணொலி வாயிலாக, ஆலோசனை நடத்தி வருகிறார். நாடு முழுவதும் மத்திய, மாநில அரசுகள் கொரோனா தடுப்பு பணிகளில் இணைந்து செயல்பட்டு வரும் நிலையில் தற்போது இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையில், மஹாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் உள்ளது. அதற்கு அடுத்த இடங்களில், தமிழகம், ஆந்திரா, கர்நாடகம், டில்லி, உத்திர பிரதேசம், மேற்கு வங்கம், தெலுங்கானா, குஜராத், பீகார் ஆகிய மாநிலங்கள் உள்ளன. இந்த 10 மாநிலங்களில், கொரோனா நோய் பரவலை தடுக்க, மாநில அரசுகள் எடுத்துள்ள நடவடிக்கைகள் மற்றும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, அந்தந்த மாநில முதல்வர்களுடன், பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்துகிறார்.
இந்த கூட்டத்தில், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, உத்தர பிரதேச முதல்வர் யோகி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், குஜராத் முதல்வர் விஜய் ரூபானி, மத்திய பிரதேச முதல்வர் உத்தவ் தாக்கரே, பீஹார் முதல்வர் நிதிஷ்குமார் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழகத்திற்கு தேவையான கோரிக்கைகளை முதலமைச்சர் பழனிசாமி முன்வைக்க உள்ளார். மேலும் பள்ளிகள் திறப்பு, பொது போக்குவரத்து தொடக்கம் தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.