சிவமொக்கா;
முன்னாள் முதல்-மந்திரியும், பா.ஜனதா மூத்த தலைவருமான எடியூரப்பா, சிவமொக்கா நகரில் ஒக்கலிக சமுதாய கூடம் பூமி பூஜை விழாவில் நேற்றுமுன்தினம் கலந்துகொண்டார். இதைத்தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா மீதான ஊழல் குறித்து லோக் அயுக்தாவில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. லோக் அயுக்தா விசாரணையின்போது உண்மை வெளியே வரும். இதில் அவசரம் தேவையில்லை. அரசியலில் ஒருவர் மீது ஒருவர் புகார் கூறுவது, அதற்கு பதில் அளிப்பது வழக்கம் தான்.
இது ஒன்றும் புதிது அல்ல. ராகுல்காந்தியின் பாதயாத்திரையால் காங்கிரசுக்கு பெரிய லாபம் ஏதும் கிடைக்காது. பிரதமர் மோடி, உலக அரசியலின் நாயகனாக விளங்கி வருகிறார். அவர் நாட்டிற்காக செய்த வளர்ச்சியால் கர்நாடக சட்டசபை தர்தலில் பா.ஜனதா மாபெரும் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும். இதில் எந்த சந்தேகமும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.